செவ்வாய், 3 ஏப்ரல், 2012

என்னடி செய்தாய் என்னை? (கவிதை)




என்னடி செய்தாய் என்னை?
என்னேரமும் உன் நினைவு
எண்ணிரு முறைதான் பார்த்தாலும்
என்னுள் வந்து கலந்தாயோ!

தன்னை மறந்த உலகம் என்பது
துன்பம் மறந்து உறங்குவதாம்!
என்னை மறந்து  உறங்குகிறேன்!
எண்ணம் உன்னை மறக்கவில்லை!

எழுத அமர்ந்த போதும் நீ
எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!
எழுந்து போக நினைத்தாலோ
ஏக்கமாகப் பார்க்கின்றாய்!

எண்ணச் சிறகை விரித்து நானோ
விண்ணில் பறக்கும் பொழுதெல்லாம்
கண்ணில் தெரியும் கற்பனைகள்
வண்ணத் தமிழின் வடிவாகும்.

இன்று அந்த நிலையில்லை!
என்ன நினைத்து அமர்ந்தாலும்
என்னில் தெரியும் காட்சியெல்லாம்
இன்பம் பொங்கும் உன்னுருவே!

தமிழைத் தொழுது எழுதிய கை
உமிழ்ந்த சொற்கள் அமிர்தமடி.
நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!

பண்ணடி பாக்கள் புனைந்தேன்! உன்
கண்ணடி பட்டதால் எனைமறந்தேன்!
என்னடித் தமிழில் பின்னலிட
என்னடி செய்தாய் என்னை?

16 கருத்துகள்:

  1. அருமை
    இளைமைத் தேனில் ஊறிய
    மரபுப் பலா அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ரமணி ஐயா!
    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. kvithai nandraga oullathou.
    parattoukkal

    பதிலளிநீக்கு
  4. எழுத அமர்ந்த போதும் நீ
    எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!
    எழுந்து போக நினைத்தாலோ
    ஏக்கமாகப் பார்க்கின்றாய்!//உண்மை உண்மை எனக்கும் இது ஏற்பட்டிருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரேம் அவர்களே!
      தங்களின் வருகைக்கும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  5. தங்கள் தளத்தின் மொழியை கவனிக்க! மொழி மாறியுள்ளதா அல்லது தங்கள் விருப்ப மொழியா (எ,க )Nombre total de pages vues -total number of page views

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா... இது பிரென்சு மொழி. எனக்கு அதைத் தமிழில் மாற்றுவது எப்படி என்று தெரியவில்லை. மாற்ற முயற்சிக்கிறேன்.
      நன்றி.

      நீக்கு
  6. // எழுத அமர்ந்த போதும் நீ
    எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!
    எழுந்து போக நினைத்தாலோ
    ஏக்கமாகப் பார்க்கின்றாய்!//

    கவிதை சிறப்பாக உள்ளது!

    சிறிய வேண்டுகோள்!

    இங்கே எடுத்துக் காட்டியதில் இறுதிவரி, ஏக்கமாய் என்னைப் பார்க்கின்றாய்!
    என்றிருந்தால் ஓசை நயம் விட்டொலிக்காமல் மேலும்
    சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து
    தவறெனில் மன்னிக்க!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சா.இராமாநுசம் ஐயா
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.
      நீங்கள் மிகச் சிறந்த புலவர். நீங்கள் என் பாட்டைப் படித்துத் திருத்தினீர்கள் என்பதே எனக்கு கிடைத்தப் பெரும் பரிசு என்று எண்ணுகிறேன். மிக்க நன்றிங்க.
      இனி எழுதும் பாடல்களைக் கவனத்துடன் எழுதுகிறேன் ஐயா.

      நீக்கு
  7. சித்திரப் பாவையவள்
    நினைவுகள் நிமித்தம்
    கையெழுத்து மாறி
    மெய் எழுத்தாய் நிலைத்து
    பொய் எழுத்தாய் மாறிடுமோ...

    என்ன ஒரு அழகான கவிதை..
    கண்கள் அகலவில்லை கவியிநின்று..
    அழகு அழகு..

    நண்பரே, உங்கள் டஷ்போர்டில் வலதுபுறம்
    மொழிக்கான தேர்வு சுட்டி இருக்கிறது.. அதில்
    ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மொழி மாறிவிடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே
      உங்களின் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும்
      மிக்க நன்றிங்க.
      மொழி மாற்றத்திற்கு நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன். உங்கள் உதவிக்கும் நன்றி.

      நீக்கு
  8. உங்கள் கவிதையைப் பற்றி சொல்லுமும்
    ஒன்றை சொல்லிவிட நினைக்கிறேன்

    அது
    உங்களின் தமிழும்
    சொல்லும் எழுத்து நடையும்
    எத்தனை மெண்மை கொள்ளையழகு
    தித்திக்கும் பேரழகு

    கவிதையைப் பற்றி என்னசொல்ல
    மொழியே இத்தனை அழகென்றால்
    அது சொல்லும் காதல்
    எத்தகைய அழகை கொண்டிருக்கும்

    ......வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும், வார்த்தைகள் இல்லை
      என்று சொல்லிவிட்டு வழங்கிருக்கும் அழகான
      கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க செய்தாலி.

      நீக்கு
  9. கன்னியின் கண்ணடி பட்டதால்
    தங்கள் எண்ணத்தில் மட்டுமல்ல ஏட்டில் கூட என்ன ஒரு அழகு ! அருமை அருமை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் இன்னும் இன்னும் எழுதத்துாண்டும் உங்களின் இரசனைக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு