புதன், 22 ஏப்ரல், 2020

நிலம்வாழ அருள்வாயே!



(வண்ணப் பாடல் – 2)
.
தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான தனதானா (அரையடிக்கு)
.
விலையி லாத பொருளோடு
  குறையி லாத திருவோடு
    வினையி லாத அழகான பெருமாளே!
விரசி லாத மொழியோடு
  பிழையி லாத அணியோடு
    வெருவி லாத மலைவாழும் பெருவேலே!
.
மலைக ளோடு நிறைந்தாடி
  இணையி லாது கலந்தாடி
    மனதி னோடு வளமான தமிழாலே
மரபி னோடு விளையாடி
  இனி தா கருவோடு
    வழுவி லாத கவிபாடி விழைவேனே!
.
நிலையி லாத உயிரோடு
  நிறைவி லாத வகையோடு
    கிருமி வாழு முலகான நிலையேனோ?
நிழலி லாத அளவோடு
  சுமையி லாத முடியோடு
    நெருட லான உயிரோட வருவாயோ!
.
அலையி லாத கடலேது?
  அடரி லாத இருளேது?
    அரிது வான பதிலேது வடிவேலா!
அகம மாக அதையோதி
  வதையி லாத வழியேகி
    அளவி லாத நிலம்வாழ அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
22.04.2020

1 கருத்து: