சனி, 18 ஏப்ரல், 2020

இதற்கு தான் காதலென்று பெயரா?



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
இதற்கு தான் காதலென்று பெயரா? – வாழ்வில்
எதற்கு தான் இதைவைத்தாய் இறைவா?
.
(தொடுப்பு)
தொட்டிடத் தொட்டிடச் சுகமென்றான்! – கைப்
பட்டிடப் பட்டிடச் சுவையென்றான்! - இன்று
எட்டிப்போய் எட்டிப்போய் நில்லென்றான்! – அவளை
விட்டுப்போய் தள்ளிநின்று சொல்லென்றான்!
.
உற்றுனைப் பார்ப்பதே அழகென்றான்! – இதழ்
ஒற்றிட்டும் மென்மையை மலரென்றான்! - இன்று
பற்றிடும் நெருப்பெனச் சுடுகின்றான்! - அவளைத்
தொற்றிடும் நோயென விலகென்றான்!
.
கட்டழகு மேனியைக் காதலித்தான்! – வெறும்
கட்டிலிடும் சுகத்திலே பேதலித்தான்! – வேறு
மெட்டழகு பொட்டழகைக் கண்டுவிட – அவளை
விட்டொழியும் காலமதைக் குறித்துவிட்டான்!
.
பெண்ணறிவு பேதையென எண்ணிவிட்டுப் – பெரும்
விண்ணளவு பழியினைச் சுமத்துகின்றான்! - இதைக்
கண்டறிந்து கொண்டதனால் அழுகின்றாள்! – இந்த
மண்ணளவு வேதனையைச் சுமக்கின்றாள்!
.
அஞ்சியஞ்சி இருந்தவளை ஆசையூட்டித் – தினம்
கொஞ்சிவந்து கெஞ்சிவந்து மோகமூட்டி – அவள்
நெஞ்சமதில் அழியாமல் நிறைந்துவிட்டு – இன்று
வஞ்சகமாய் வலைப்பின்னி மறைந்துகொண்டான்!
.
கற்றவனாய் இருந்திருந்தால் உயர்ந்திருப்பான்! – நட்பை
உற்றவனாய் இருந்திருந்தால் நினைத்திருப்பான்! – அன்பு
அற்றவனை நெஞ்சத்துள் நிரப்பியதால்  - அதைக்
குற்றமென மௌனமாய் அழுகின்றாள்!
.
பாவலர் அருணா செல்வம்
18.04.2020

1 கருத்து: