திங்கள், 10 டிசம்பர், 2018

1 விரி உவமை!




    விரி உவமை என்பது பண்பும், தொழிலும், பயனும் பொருளுக்கும் உவமைக்கும் பொதுத் தன்மையாக உவம உருபு விரிந்து நிற்பதும், உவமையும், பொருளும், உருபும், பொதுத்தன்மையும் ஆகிய நான்கும், அல்லது ஏதேனும் சிலதோ பாடலில் விரிந்து வருவது விரி உவமை ஆகும்.

உ.ம்

மீன்போலத் துள்கண்ணும் மேகம்போல் கார்குழலும்
தேன்போல வார்த்தைத் தெளிந்தவளே! – வான்மழை
நீர்போல் வளம்தரும் நெஞ்சமதில் செந்தமிழின்
சீர்போல் செழிப்பாய் சிறந்து!

பொருள் மீன் போலத் துள்ளும் கண்களும், மேகம் போல கூந்தலும், இனிய தேனின் சுவைப்போல வார்த்தைகளைச் சொல்ல தெளிந்தவளே நீ வானிலிருந்து கொட்டும் மழையின் நீரைப்போல வளத்தைத்தரும் என் நெஞ்சத்தில் செந்தமிழின் சீரைப்போல செழிப்புடன் இருந்து சிறந்திடுவாய்.
    மீன்போலத் துள்கண்கள் என்பதில் பொருளும் உவமையும் தொழிலும் வந்துள்ளது., போல என உவம உருபுகள் விரிந்தும் வந்துள்ளது. மேகம் போல் கூந்தல் என்பதில் கருமை பண்பு வந்துள்ளது. பாடலில்  பல இடங்களில்போல என்ற உவம உருபு விரிந்து வந்துள்ளதால் இது விரி உவமை ஆகும்.

பாவலர் அருணா செல்வம்
10.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக