வியாழன், 6 நவம்பர், 2014

“அம்மா“ என்றே சொல்லிப்பார்!!



தாயின் மொழிக்கோர் பாட்டெழுதத்
        தானே அமர்ந்தேன் தாளெடுத்து!
வாயில் வார்த்தை வதைந்தாலும்
        வடிவாய்ச் சேர்த்தேன் கோலெடுத்து!
தீயின் தன்மைச் சேர்க்காமல்
        சிறந்த சீரால் சொல்லெடுத்துச்    
சேயின் குரலால் செப்புகிறேன்
        செம்மைத் தமிழில் கவிதொடுத்து!

இம்மாம் பெரிய உலகத்தில்
       இனிய மொழிகள் பலவுண்டாம்!
தம்மா தோண்டு சொன்னாலும்
       தமிழின் சொல்லில் இனிப்புண்டாம்!
அம்மா என்றே சொல்லிப்பார்!
       அமிர்தம் ஊறும் உன்வாயில்!
சும்மா நானோ சொல்லவில்லை
       சொல்லும் போதே சுவையறிவாய்!

எங்கள் இதயம் ஏற்றமொழி
    எழுதும் ஏட்டில் மின்னிடுமே!
எங்கள் பிள்ளைச் செல்வங்கள்
       ஏனோ தமிழைத் தள்ளுகிறார்!
சங்கம் அமைத்த சான்றோர்கள்
       சரியாய் இதனைக் கவனித்தால்
தங்கம் போன்ற மொழிகற்றுத்
       தாயாம் தமிழை அறிந்திடுவார்!
  
அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்!
       ஆழ்ந்து கற்றால் பயனுண்டாம்!
பொன்னை விடவும் மதிப்புண்டாம்!
       புதிய பொருளின் பொலிவுண்டாம்!
முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
       முன்னில் பிறந்து வந்ததெனத்
தொன்மை நூல்கள் சொல்வதைநாம்
       தொழுது படித்தால் உயர்வுண்டாம்!

 அருணா செல்வம்

 06.11.2014

34 கருத்துகள்:

  1. அம்மாவை போல அழகான பாடல் !! வாழ்த்துகள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மல்லிகைக்கு மயங்கி இப்போதுதான் இந்த அம்மா மயக்கம் தெளிந்து வருகிறார்களோ?

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
    3. “உண்மைகள்“.... அது மதுரை மல்லியின் மயக்கம் இல்லை.
      வலைப்பதிவர்களைச் சந்தித்த மகிழ்ச்சி மயக்கம்.....

      நீக்கு
  2. தாயினுஞ்சிறந்த கோயிலுமில்லை
    அருமை சகோதரியாரே
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. சிறப்பிற்கு சிறப்பு...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      இன்னுமா வேலை முடியவில்லை.....?!

      நீக்கு

  4. //அம்மா என்றே சொல்லிப்பார்!
    அமிர்தம் ஊறும் உன்வாயில்!///

    என்னை அம்மா என்று தினசரி சொல்லவைப்பது என் மனைவிதான்
    ஆனால் நான் அம்மா என்று சொல்லும் போது வாயில் அமிர்தம் ஊறவில்லை கண்ணீர்தான் கண்ணில் ஊறுகிறது... எல்லாம் அந்த பூரிக்கட்டை மகிமைதான்

    சும்மா நானோ சொல்லவில்லை
    சொல்லும் போதே வலியறிவாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... நீங்கள் சொல்லும் போதே மாமிக்கு எப்படி கை வலித்திருக்கும் என்பதை அறிய முடிகிறது தமிழரே.....

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு

  8. வணக்கம்!

    அன்னைத் தமிழமுதை அள்ளி அருந்திடுவீர்!
    முன்னைப் புகழ்ஏந்தி முன்னிற்பீர்! - என்னைக்
    கவர்ந்திழுக்கும் வண்ணம் கவிபடைத்தீா்! இன்பம்
    குவிந்திருக்கும் என்னுள் கொழித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொழித்த கவிதைக்குக் கூப்பினேன் கைகள்
      செழித்த கவியின் சிறப்பு!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. அம்மா என்பது அழகான சொல் .ஆனால் இங்கே தமிழகத்தில் மிகவும் கொச்சைப் படுத்தி விட்டார்கள் !
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

      ஆனால்... மனசில்லாமல் அழைப்பதும் உறவா?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  10. தாய் மொழியும்,தாயின் மொழியும் எப்போதும் நெஞ்சில் நிற்பவைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பித்தன் ஐயா.

      நீக்கு
  11. அன்னையின் சிறப்பை உணர்த்தும் வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  12. இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,குருதியின் குணம் மாற்றி அமுதாய்ப் படைத்த
    அன்னைக்கு அற்புதமான பாமாலை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மகி அண்ணா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்...
    அமுதாய் அதையும் பருகிடுவோம்...
    சொன்ன கவிதை சிறப்பினிலே
    சொக்கி நிற்கிறேன் சகோதரியே...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  14. சகோதரிக்கு வணக்கம்! உங்கள் வரிகளை தேனூருகிறது.
    " முன்னை இருந்த மொழிக்கெல்லாம்
    முன்னில் பிறந்து வந்ததெனத்
    தொன்மை நூல்கள் சொல்வதைநாம்
    தொழுது படித்தால் உயர்வுண்டாம்!" வரிகள் அருமை.
    வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாகாசுந்தர் ஐயா.

      நீக்கு
  15. // அம்மா என்றே சொல்லிப்பார்!
    அமிர்தம் ஊறும் உன்வாயில்!//

    அருமை.....

    த.ம +1

    இன்று எனது பக்கத்தில் கவிதை எழுத ஒரு அழைப்பு!

    பதிலளிநீக்கு
  16. அருமை.நான் உங்கள் போகப் போக தெரியும் கதை படித்தேன்.மிகவும் சுவாரசியமான மற்றும் அருமையான கதை.ரொம்ப அருமையாக இருந்தது.பகிர்விற்கு நன்றி.உங்களுடைய "மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து" நாவல் எங்கு படிக்கலாம்.

    நன்றி,
    சுஜாதா

    பதிலளிநீக்கு
  17. அன்னை அருமைதனை ஆராய்ந்தே செம்மொழியில்
    சொன்ன முறைகண்டே சொக்கினேன் -என்னருமை,
    மகளே! மகிழ்வுதரும் மாத்தமிழின் நல்முத்தே!
    புகலத்தான் வேண்டா புகழ்

    பதிலளிநீக்கு
  18. // அம்மா என்றே சொல்லிப்பார்!
    அமிர்தம் ஊறும் உன்வாயில்!//

    ஆஹா! உண்மைதானே! அம்மா என்ற வார்த்தையின் அர்த்தமே அதுதானே! அருமையான கவிதை! சகோதரி!

    பதிலளிநீக்கு