வெள்ளி, 21 ஏப்ரல், 2023

குரு வணக்கம்!

 


கல்யாண போகத்தைக், கற்றோரின் நல்லுறவைச்,
சொல்ஞான சீர்மை சுகத்துடன் – பொல்லாத்
தடுப்புகளைப் போக்கித், தழைத்தோங்கும் வாழ்வைக்
கொடுத்திடுவார் சென்ம குரு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2023

செவ்வாய், 7 மார்ச், 2023

சந்த விருத்தம் - 4

 


சந்த விருத்தம் - 4
(6 + 6 + 6 + 4)
.
ஒளியேவிழி அருளேபொழி ! உறவேதொட ராகும் !
கிளியேயென அமுதேபொழி கிலியேவெளி யோடும் !
அளியேகவி அகமேயென அதுவேதமி ழாகும் !
உளியோடிய சிலையோயென உலகேயதி லாடும் !
.
சந்தக் கலிவிருத்தம் - 5
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மலையென வளர்வது மனமெனு மிடமே!
அலையென மறைவது(ம்) அழிகிற வகையே!
விலையென உயர்வது விதியெனு மரசே!
கலையென நிறைவது கடவுளி னுருவே!
.
சந்த விருத்தம் - 6
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மெல்லிய பூவில் மெல்லிசை பாடும் !
சொல்லிய சீரில் சொக்கிட ஆடும் !
துல்லிய தேனின் தொன்மையி லாழும் !
வல்லமை யேகும் வண்டின மாகும் !
.
(துல்லியம் – சுத்தம்)
.
சந்தக் கலிவிருத்தம் - 7
(4+4+4+4)
.
அன்புடை நெஞ்சினு ளாறிய நோயோ
வன்வடு கொண்டது வானென நீண்டே!
இன்பென எண்ணிய ஏறிய நாளோ
முன்மன மொன்றிய மூவிசை வேரே!
.
சந்தக் கலிவிருத்தம் - 8
(4+6+4+6)
.
பொருளினை விளங்காது புணைகிற அடியாலே
கருவினை யறியாமல் கனமழை இருளாகும்!
திருமக னருளாலே தினமொரு கவியெழுதித்
தருகிற தெளிவாலே தணிகிற மனமாகும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.03.2023

புதன், 1 பிப்ரவரி, 2023

இமைக்குள்ளே நீ!

 


உமையாளை இடம்வைத்த ஈசன் உள்ளம்
   உயர்வுணர்த்தும் பெண்ணினத்தின் மேன்மை சொல்லும் !
எமைக்காக்கும் கடவுளைப்போல் காதல் கொண்டே
   என்னவளை என்கண்ணில் வைத்தேன் நன்றே!
சுமையென்றே வாழ்வினையே நினைத்தேன்! அன்பு
   சுந்தரியுன் காதலினால் வசந்தம் கண்டேன்!
இமைக்குள்ளே நீயிருந்து நடத்து கின்றாய்
   இனியாவும் நலமாகும் என்றன் வாழ்வில்!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2013

திங்கள், 30 ஜனவரி, 2023

தழுவாத கைகள்!

 


பெற்றோர்கள் கண்தழுவும் பிள்ளை மீதே!
       பெண்டீர்கள் மனம்தழுவும் கணவன் மீதே!
கற்றவர்கள் உளம்தழுவும் கல்வி மீதே!
       காதலனோ நிதம்தழுவான் நினைவி னாலே!
பற்றெல்லாம் விட்டவர்கள் நோக்கம் எல்லாம்
       பரந்தாமன் கால்தழுவ வேண்டும் என்றே!
சுற்றமற்றுச் சுயநலமாய் வாழ்வோர்க் குண்டே
      சுமையாக நீண்டதழு வாத கைகள்!
.
பாவலர்  அருணா செல்வம்
31.01.2023

வெள்ளி, 13 ஜனவரி, 2023

போகி பண்டிகை வாழ்த்து ! (2023)

 


எத்தனையோ துரோகங்கள்
       எடுத்தெறியா(து) உள்ளிருக்கும்!
எத்தனையோ கோபங்கள்
      எந்நாளும் உழன்றிருக்கும்!
அத்தனையும் போகியன்றே
      அழுக்கென்றே எரித்திடுங்கள்!
புத்தாண்டு நாளன்று
     புதிதாகப் பிறந்திடுங்கள்!
.
தோழ தோழியர் அனைவருக்கும்
இனிய போகி திருநாள் வாழ்த்துகள்!
.
அன்புடன்
அருணா செல்வம்
14.01.2023

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தங்கமொழி! (சந்தக் கலிவிருத்தம்)

 


.
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
.
விந்தையென எண்ணுகிற விண்ணுலகு மேலாய்
வந்தொளிர நின்றொளிர வந்ததெது கூறு!
சந்தமிகு தன்மையொடு சன்னமிசை யான
சிந்தையொடு வண்ணமிகு செந்தமிழை நாடு!
 
அன்னையொடு வந்தவழி அன்புமிக மேவும்!
புன்னகையில் இன்பமொளிர் பொங்குவது பாடும்!
தன்னிறைவு கொண்டநிலை தன்னிசையி லாடும்!
அன்னமென உண்டுணர ஐயநிலை யோடும்!
 
பஞ்சநிலை என்பதிலை பண்ணொலியு மஞ்ச
விஞ்சிவரும் இன்பநிலை வெண்டளையி லொன்ற
கொஞ்சுகிற இன்பமது கொண்டமொழி யென்று
தஞ்சமிட நம்புகிற தங்கமொழி யன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2023

சனி, 31 டிசம்பர், 2022

புத்தாண்டு வாழ்த்து ! 2023

 

.

அன்பைக் கொட்டும் அன்னையைப்போல்
        அறிவைக் காட்டும் தந்தையைப்போல்
இன்பங் கூட்டும் நட்பைப்போல்
       எழுமை ஊட்டும் கல்வியைப்போல்
நன்மை பயக்கும் செல்வம்போல்
       நல்ல துணையின் உறவைப்போல்
இன்று பிறக்கும் புத்தாண்டு
      இணைந்து வளமாய் வரவேண்டும்!
 
வருக வருக புத்தாண்டே !
       வாழ்வும் வளமும் கொடுத்தருள்க !
தருக தருக புகழ்யாவும்
      தமிழைப் போன்று உயர்ந்தோங்க !
உருகி யாடும் மனம்யாவும்
      உயர்ந்து நிறைந்து மகிழ்வோங்க !
அருமை ஆண்டாய் இருந்திடவே
       ஆசை கொண்டு அழைக்கின்றோம் !
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2023

 
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

வியாழன், 29 டிசம்பர், 2022

இனிமை கொடுக்க நீவேண்டும்!

 

.   

கருத்தில் கல்வி ஒளியிருந்தும்
       கண்ணில் குருடாய் நடந்துவந்தோம்!
மருட்டும் வழியில் மாவிடர்கள்
      மறைந்தும் தெரிந்தும் கடந்துவிட்டோம்!
இருட்டைக் கிழித்த ஒளிவிளக்காய்
       இனிமை கொடுக்க நீவேண்டும்!
உருண்ட உலகோர் மகிழ்வுறவே
      உயர்த்தும் ஆண்டாய் வரவேண்டும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2022

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மகிழ்ந்தே பயில்வோம்!

 



(சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்! 
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!

மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!

மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
 .
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அண்ணாமலையாரே!

 




(பிரிந்திசை வண்ணம்)

.
தன்னாதன தனதன
தன்னாதன தனதன
தன்னாதன தனதன தனதான (அரையடிக்கு)
 
அண்ணாமலை யுறைகிற
    பொன்மேனியி லொளியிடு
    மன்பாய்நல மருளிடு மனலோனே!
அஞ்ஞானமொ டலைகிற
    சந்தானிகை மனமுட
    னன்றாடஉ மதுமலை நினைந்தேனே!
 
பெண்ணாகிய வடிவுற
    பண்பாகிய குணநிலை
    பெம்மானென மழலையு மடைந்தேனே!
பின்னாளினி லுளமுனை
    நெஞ்சோடெனை அடைகிற
    பிண்டீதக மணநிலை எதனாலே!
 
விண்மோதும லையழகு
   செந்தீபமொ ளியழகு
   விண்ணோரும தனழகி லுழல்வாரே!
விஞ்ஞானவி வரமொடு
   பஞ்சானனு ருமறைய
   மெய்ஞ்ஞானமு ருவடிவி லருள்வாயே!
 
பண்பாடுட னசைபொரு
    ளொன்றோடிட இசையொடு
    பண்பாடிட வருமெனை மனதாலே
பஞ்சீகர அருளொடுஉ
    டம்போடுயிர் நலமொடு
    பண்ணோதிட அருளிடு பெருமானே!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2022

 
சந்தானிகை - பாலேடு
சந்தாபம் - துன்பம்
பிண்டீதகம் - மருக்கொழுந்து
பஞ்சானன் - சிவன்
பஞ்சீகரம் - ஐம்பூதங்களும்