ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒளிருங் கணபதி பெருமானே! (குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் - 61)


 

 

.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா  (ஒரு கலைக்கு)
 
.
உலகின் முதலென உணரும் வகையினி
    னொளிருங் கணபதி பெருமானே!
  உதவும் வகையொடு கதறும் மனதினி
    லொளிரும் நலமதை யருள்வாயே!
 
பலரின் கருமொழி நிறையும் மனமது
    பதியும் பொதியொடு சுமையாமே !
  படியுங் கழிவினை மறையும் வழியது
    பரமன் தொடர்கிற இடந்தானே!
 
நிலவும் பழவினை நினைவும் விலகிட
    நெடிதுன் விழிதனி லறிந்தாலே
  நியமந் தருகிற வழியுந் தொடரிட
    நிறையும் வரமது வரும்தாமே !
 
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
    மணமும் நிறைகிற நெகிழ்வோடே
  வளருங் கவியொடு பணியுந் தலையொடு
    மனதும் வழிபட மகிழ்வாயே!
.

தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.

.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023



செவ்வாய், 20 ஜூன், 2023

மெலி அகவல் ஏந்திசை வண்ணம் !



 
எண்ணமென்ற கண் !
.
தன்ன தந்த தன்ன தந்த
தன்ன தந்த தந்தானா! (ஒரு கலைக்கு)
.
அன்னை யென்று முன்னை யொன்றி
   அன்மை யன்றி நின்றேனே!
அன்ன மென்ற வெண்மை கண்டு
    மண்ண லென்ற றிந்தேனே !
 
இன்ன லென்று யின்மை யென்று
    மெண்ணி நின்ற யர்ந்தேனே!
எண்ண மென்ற கண்ணி ருந்து
    மிங்ங னம்ப யந்தேனே !
 
மன்ன னுன்றன் மின்னி டும்பொன்
    மண்ணி னின்ற செவ்வேலால்
வன்மை யின்ப யம்மி ரண்டு
    வன்ந கர்ந்து டன்வாழ்வேன் !
 
என்ன வென்று கண்ணி லென்று
   மெண்ணி யுன்ப தங்காண்பேன் !
எண்ண மென்ற உன்னு யர்ந்த
   இம்மை யின்ப முண்பேனோ !
.
பாவலர் அருணா செல்வம்
20.06.2023

 
அன்மை - தீமை
அண்ணல் - கடவுள்

நெஞ்சினில் நிறைந்தவள்! பெண் குழந்தைக்கான பாடல்!

வெள்ளி, 16 ஜூன், 2023

வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம் !

 


 தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தனதானா  (ஒரு கலைக்கு)
 
விதி கொடுத்திடும் அடி!
.
விதிகொ டுத்திடு மடிவ லிக்கிற
      வினைந டத்திடு மியல்தானே!
 விலைய ளிக்கிற செயல்மு டிக்கிற
     விசைய முக்கிட வருவாயே!
 
நிதிஎ தற்கென உயர்ம னத்தினை
     நிறைப டுத்தியு மருள்வாயே!
 நினைவ தைக்கிற பசிய டக்கிய
    நிலைய ளித்திடு பெருமானே !
 
சதிய டிக்கிற வினைய கற்றிடு
     சபைய மர்த்திட உயர்வேனே!
  சவலை யுற்றது கவலை பட்டது
     சரவ ணப்புக ழிகழ்வாலே!
 
மதிய ளிக்கிற புதிய கற்பனை
     மனத ளிக்கிற நிழல்தானே!
  மனம யக்கிய துயர்வி ளக்கிய
     மனைய றத்தினை உணர்வேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
16.06.2023

செவ்வாய், 13 ஜூன், 2023

நெடில் அகவல் ஏந்திசை வண்ணம்

 

 

பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
தான தான தாந்த தான தான தாந்த
தான தான தாந்த தனதானா!    (ஒரு கலைக்கு)
.
தேவி வாயி லூர்ந்து தேவ கீதஞ் சேர்ந்த
    தேனி லூறுந் தீஞ்சு வையின்பாகோ!
  தேகம் வாட நேர்ந்த தீமை யான வீம்பு
    தேயும் போதும் நீந்தும் மதிபோலோ!
 
ஆவி யோடு சேர்ந்த ஆசை மோக மேந்தி
    ஆடி யாடி நீந்தும் மனமேனோ?
  ஆவ லாக லேங்கி ஆகம் நாடி ஓய்ந்த
    ஆய மேது தேர்ந்து மறிவேனோ!
 
பாவி யாக வீழ்ந்தும் வேதை யாக வாழ்ந்தும்
    பாசந் தேடி வேண்டி யழுதாலே
  பாலை மாறும் தேர்ந்த பாலுந் தேனும் மீந்தும்
    பால மாகும் பாங்கை யருள்வாயே!
 
பாவி லோதும் பாங்கு வாழும் போது சேர்ந்தும்
    பாச மோடு நீண்டு மருள்வாயே !
  பாதை மாலை யேந்தும் பூவின் வாசந் தீண்டும்

    பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
13.06.2023
 
ஆகம் – உடல்,
ஆயம் - இன்பம்
வேதை - துன்பம் 

வெள்ளி, 2 ஜூன், 2023

குறில் அகவல் ஏந்திசை வண்ணம்.

 

 
.
நம்புகின்ற வழியேது ?
.
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தனதான (ஒரு கலைக்கு)
.
அன்பு மென்ப தின்பந் தந்த
    அங்க மென்று முயர்வாகும்!
  அன்று மின்றுங் கொஞ்சும் மென்கை
    அந்தம் மிஞ்சு மமிர்தாகும்!
 
இன்ப மொன்றை என்று முந்த
    எங்கு முன்ற னுருவாகும்!
  இன்றி யெங்கும் துன்ப மொன்ற
    எந்தை எங்கென் றுனைநாடும் !
 
நன்றை யன்றி வஞ்ச நெஞ்சு
    நண்ப னன்பை அறியாது !
 நம்ப வஞ்சும் நெஞ்சை விஞ்சி
    நம்பு கின்ற வழியேது 
 
துன்ப மென்று கொண்ட தென்றும்
    தொங்கு மிந்த வுயிராகும்!
  சொந்த மென்ற இந்த பந்தம்
    சுந்தர் கந்த னுருவாகும் !
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2023

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

குரு வணக்கம்!

 


கல்யாண போகத்தைக், கற்றோரின் நல்லுறவைச்,
சொல்ஞான சீர்மை சுகத்துடன் – பொல்லாத்
தடுப்புகளைப் போக்கித், தழைத்தோங்கும் வாழ்வைக்
கொடுத்திடுவார் சென்ம குரு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2023

செவ்வாய், 7 மார்ச், 2023

சந்த விருத்தம் - 4

 


சந்த விருத்தம் - 4
(6 + 6 + 6 + 4)
.
ஒளியேவிழி அருளேபொழி ! உறவேதொட ராகும் !
கிளியேயென அமுதேபொழி கிலியேவெளி யோடும் !
அளியேகவி அகமேயென அதுவேதமி ழாகும் !
உளியோடிய சிலையோயென உலகேயதி லாடும் !
.
சந்தக் கலிவிருத்தம் - 5
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மலையென வளர்வது மனமெனு மிடமே!
அலையென மறைவது(ம்) அழிகிற வகையே!
விலையென உயர்வது விதியெனு மரசே!
கலையென நிறைவது கடவுளி னுருவே!
.
சந்த விருத்தம் - 6
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மெல்லிய பூவில் மெல்லிசை பாடும் !
சொல்லிய சீரில் சொக்கிட ஆடும் !
துல்லிய தேனின் தொன்மையி லாழும் !
வல்லமை யேகும் வண்டின மாகும் !
.
(துல்லியம் – சுத்தம்)
.
சந்தக் கலிவிருத்தம் - 7
(4+4+4+4)
.
அன்புடை நெஞ்சினு ளாறிய நோயோ
வன்வடு கொண்டது வானென நீண்டே!
இன்பென எண்ணிய ஏறிய நாளோ
முன்மன மொன்றிய மூவிசை வேரே!
.
சந்தக் கலிவிருத்தம் - 8
(4+6+4+6)
.
பொருளினை விளங்காது புணைகிற அடியாலே
கருவினை யறியாமல் கனமழை இருளாகும்!
திருமக னருளாலே தினமொரு கவியெழுதித்
தருகிற தெளிவாலே தணிகிற மனமாகும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.03.2023