செவ்வாய், 22 ஜூலை, 2014

காசா? கல்யாணமா? (முடிவு)



    “கௌரி மேடம் மீட்டிங்குல இருக்கிறாங்க. முடியிற நேரம் தான். நீங்கள் காத்திருப்பதென்றால் அந்த ஹாலில் காத்திருங்கள்“ என்று அந்த அலுவக ஊழியர் சொல்லிவிட்டுச் சென்று அரை மணிநேரம் கடந்த பிறகு தான் கௌரி ஒரு கும்பல் புடைசூழ ஓர் அறையைவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இவளைக் கடந்து சென்றாள்.
    மலர் அவளை வியப்புடன் பார்த்தாள். கௌரிக்குப் படிப்பு முடிச்சதும் அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது என்றும் அதே அலுவலகத்தில் மேலும் மேலும் பதவி உயர்வுகள் கிடைத்திருக்கிறது என்றும் விக்ரம் சொல்லி கேட்டிருக்கிறாள். அப்பொழுது அதையெல்லாம் மலர் பெரியதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் இங்கே பார்க்கும் பொழுது மலருக்குப் பிரமாண்டமாகத் தெரிந்தது.
   அவள் பலபேருக்கு உத்தரவு இடுபவள் போல் தெரிகிறாள். இவள் சொல்வதைத் தலையாட்டிக்கொண்டே குறிப்பு (நோட்ஸ்) எடுத்தபடி மற்றவர்கள் அவள் பின் செல்கிறார்கள்.
   இதையெல்லாம் பார்த்த போது மலர், இவளே பலபேருக்குப் புத்தி சொல்கிற அளவிற்கு இருக்கிறாள். இவகிட்ட நாம என்னவென்று பேசுவது.... பேசாமல் போய்விடலாமா.... என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.... “ஐ... மலரக்கா. ஐய்யோ. உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக்கிறீங்க....?“ என்று குழந்தைத் தனமாக கேட்டபடி அவள் எதிரில்வந்து அவளைக் கட்டி முத்தமிட்டாள் கௌரி. 
    மலர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள்.
   “நல்லா இருக்கேன் கௌரி. ஒரு வேலையா இங்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சி. நீ இங்க தானே வேலை செய்யிற? அப்படியே உன்கூடவே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு தான் உன் ஆபிசுக்கு வந்தேன்“ என்றாள் மலர்.
   கௌரி இதை நம்பாதது அவளின் முகத்தில் தெரிந்தாலும் அதை மறைத்து “அப்படியா? சரி வாங்க போகலாம்“ என்று சொல்லியபடி இறங்கி நடந்தாள். மலரும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

   காரை ஒரு திறந்தவெளி ரெஸ்டெராண்டில் நிறுத்திவிட்டு ஓர் அமைதியான சூழல் உள்ள இடத்தில் மலரை அமர வைத்துவிட்டு எதிரில் அமர்ந்ததும், “இப்போ சொல்லுங்க அக்கா. என்ன விசயமா என்னைப் பார்க்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறீங்க?“ மெல்லிய புன்முறுவலுடன் கௌரி கேட்டாள்.
   மலர் அவளின் புத்திசாலி தனத்தை உணர்ந்து அதற்கு மேல் இவளிடம் பொய் சொல்வது தவறு என்ற எண்ணத்துடன் நேரிடையாக விசயத்திற்கு வந்தாள்.
   “நான் உண்மையைச் சொல்லிடறேன். உன்னோட கல்யாணத்தைப் பற்றி பேச தான் வந்தேன்.“ என்றாள்.
   “விகரம் அண்ணா எங்கிட்ட பேச சொல்லி உங்கள அனுப்பினாரா....?“ கௌரி கேட்டாள்.
   “விக்ரம் அண்ணா இருக்கட்டும். நானே ரொம்ப நாளா கேட்கனும்ன்னு இருந்தேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?“
   இவளின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமலிக்க... “உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா? இருந்தா சொல்லு. நானே பக்கவமா விக்ரம் கிட்ட சொல்லுறேன்“ என்றாள் மெதுவாக.
   “அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா.“
   “நெஜமா சொல்லு. நீ யாரையும் காதலிக்கல.....?“
   கௌரி வெறுப்பாய் ஒரு புன்னகையை வெளியிட்டாள். “காதலிக்கிற வயசு வந்த போது, மனசைப் படிக்கனும் என்ற லட்சிய சங்கிலியால கட்டி போட்டிக்கினு இருந்தேன். அது ரொம்ப இறுக்கிடுச்சின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மனசு மறுத்துப் பேச்சின்னு நினைக்கிறேனுக்கா.“ என்றாள் கௌரி.
   சற்று யோசித்த மலர், “வாழ்க்கையில லட்சியம் எல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக மனசை கட்டுப்படுத்தி வாழுறதும் நல்லது தான். ஆனால் இப்போ உன் லட்சியம் எல்லாம் நிறைவேறிடுச்சே. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே....“ கேட்டாள்.
   “இல்லக்கா. எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் வரலை.“
   “அப்போ இப்படியே இருந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா...?“
   “இன்னும் அந்த முடிவுக்கெல்லாம் வரலை. பார்ப்போம்“ பொதுப்படையாகச் சொன்னாள் கௌரி.
   “இனிமேல என்ன பாக்குறது? எனக்கெல்லாம் வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற வயசு வர்றதுக்கு முன்னாடியே பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணிட்டாங்க. உன் வயசுல என்னோட குழந்தைங்க ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிட்டது தெரியுமா?“
   “தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.
   “என்ன சொல்ல வர்ற நீ? புரியலை. எங்களை மாதிரி நீங்களும் எதுவும் தெரியாமல் வாழ்க்கையைத் தொடங்கிடக் கூடாதுன்னு தான் பெண்களைப் படிக்க வைக்கறாங்க. அவ காலுல அவ நிக்கனும்ன்னு நெனச்சி தான் வேலைக்கி அனுப்புறாங்க. இப்போ படிச்சதால உனக்கு நல்ல தெளிவு வந்திருக்கும். வாழ்க்கை என்றால் என்னன்னு புரிஞ்சிருக்கும். இவனைத்தான் நீ கட்டிக்கனும்ன்னு யாரும் உன்னை கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு பிடிச்சி நீயே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிற பக்கவம் வந்திருக்கு இல்லையா?“ சற்று கோபமாகவே கேட்டாள் மலர்.
    கௌரி ஒரு பெருமூச்சு விட்டாள். “பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ என்றாள் வெறுப்பாய்.
   மலர் யோசித்தாள். கௌரி சர்வர் கொண்டு வந்து வைத்தக் காபியைக் குடித்து முடித்தாள். மலர் காபியைக் கலக்கிக் கொண்டே பேசாமல் இருந்தாள்.
   “அக்கா.... உண்மையான காதல் என்று வர்ற வயசுல என்னையும் சிலபேர் காதலிப்பதாக சொன்னார்கள். காதலில் விழுந்தால் நாம் படிக்கனும், சம்பாதிக்கனும் என்ற லட்சியம் எல்லாம் போயிடும் என்ற பயத்தாலே அதெல்லாம் கூடாது என்ற மனக்கட்டுபாடோட இருந்தேன். இப்போ அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளைகளோட இருக்கிறார்கள். என்னை உயிரக்குயிராய் காதலிப்பதாக சொன்னவன் கூட இன்னைக்கு தன் குழந்தையை ஸ்கூலுல சேர்க்க லைனுல நிக்கிறான். என்னைவிட நன்றாக படித்தவர்கள் கூட காதல், கல்யாணம் என்ற ஒரு வட்டத்துக்குள் விழுந்து அதில் கஷ்டப்படுவதையும் சுகமாகத் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது வேறு விசயம். ஆனால் எனக்கு அந்த வட்டத்துக்குள் விழ ஆசை இல்லை மலரக்கா“ என்றாள் கௌரி.
   மலர், இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
    கௌரியே தொடர்ந்தாள். “இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“ என்றாள் கௌரி.
   நல்ல பாயிண்ட் கிடைத்தது என்ற நினைப்பில் மலர் நிமிர்ந்து உட்கார்ந்து “அதுக்காக காசையே கட்டிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா? உடம்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் உணர்வு என்ற ஒன்று இருக்கிறதே.... அதை நீ யோசிக்கிறதில்லையா...?“ கேட்டாள்.
   “வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ என்றாள் சட்டென்று கௌரி.
   “சரி கௌரி. இந்த வயதைவிடு. பிற்காலத்தில் உனக்கு என்று ஒருவர் வேண்டாமா....? இப்படியே வாழ்ந்தால் கடைசியில் தனிமரமாகத்தான் இருக்கனும்“ கொஞ்சம் கோபமாகச் சொன்னாள் மலர்.
   கௌரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சொன்னாள். “கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.

------------------------------------------------------
    மலர் யோசித்தாள். இவள் சொல்வதும் உண்மை தான். அதற்காக இவளை இப்படியே விட்டுவிடவும் கூடாதே.
   என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்.....?

நட்புறவுகளே.... உங்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.

“என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்....?“

   இந்தக் கதையைச் சிறுகதையாக எடுத்துக்கொள்ளாமல் உண்மைக் கதையாக எடுத்துக் கொண்டு பதில் கூறுங்கள்.
      
நட்புடன்
அருணா செல்வம்.

22.07.2014

16 கருத்துகள்:

  1. 30 வயதான கெளரி, தனக்கு "எல்லாம் தெரியும்" என்பதுபோல்தான் பேசுகிறாள். பணமிருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழலாம் என்றும் தெரிந்து வைத்துள்ளாள்.

    காதலிக்க வயது 30 க்கு கீழேதான் இருக்கணும், தனக்கு இனிமேல் காதல் எல்லாம் வராதுனு நம்புகிறாள்.

    மேலும் அவள் அவள் அண்ணாவுக்கு பாரமாகவும் இல்லை. நாளை அவனுக்கே ஏதாவது உதவி தேவைப்பட்டால் கணவன்னு இன்னொருவனிடம் பெர்மிஷன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு இருக்கிறாள்.

    தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பும் ஒருவருக்கு அட்வைஸ் கொடுப்பது என்னைப்பொறுத்தமட்டில் அறிவீனம்.

    She is an adult and independent woman. It's her life. Let her live!

    சிவானந்தா அனாதை ஆசிரம்த்தில் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யமுடியுமானு, விக்ரமும், மலரும் விசாரிக்க்லாம். அதை விட்டுப்புட்டு எதுக்கு இந்த வெட்டி வேலை?னு தெரியலை, ஆசிரியை அவர்களே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அதை விட்டுப்புட்டு எதுக்கு இந்த வெட்டி வேலை?னு தெரியலை, /

      இது வெட்டி வேலை இல்லைங்க.
      வாழ்க்கை என்ற பற்றுதலை ஒட்டி வைக்கும் வேலை.

      அவள் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறாளே தவிர
      வாழ்க்கை என்பது என்ன என்பதை அவள் முழுமையாக அறியவில்லை. அனுபவிக்க வில்லை.

      அவள் பணத்தில் வாழ்கிறான் என்ற குற்றச்சாட்டுடன் வாழும் அண்ணனுக்கு என்ன ஆறுதல்?

      ஒரு நல்ல செய்தி என்றால் ஓடிப்போய் வாழ்த்து சொல்லும் என் போன்றோர் அவன் கவலையைக் கொட்டி அதற்கோர் முடிவு சொல்லுங்கள் என்று கேட்கும் பொழுது தயங்குவதா?

      சரி விடுங்கள் வருண் சார்.
      நீங்கள் சொன்னது போல்
      She is an adult and independent woman. It's her life. Let her live!

      நாம் விட்டுவிடலாம்.
      அவள் எண்ணத்தையும் மாற்றி தன் அன்புக்கு அடிமை படுத்த ஒருவன் இனி தானா பிறக்க வேண்டும் .....
      வரட்டும். வரும் வரையில் காத்திருப்போம்.... என்று “கதையை“ முடித்து விடலாம்.

      தங்களின் உடன் வந்து எழுதிய அருமையான கருத்திற்கு
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு
  2. உணர்வு இல்லாத ஜடத்தைக் கூட, விரும்பும் அந்தப் பணமே ஒரு நாள் திருத்தும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் என்றைக்குமே ஒருவனைப் பாழ்படுத்துமே தவிர திருத்தாது தனபாலன் அண்ணா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  3. அன்புடயீர்!
    கௌரிக்கு இது ஏன் புரியவில்லை... வெறும் 30 எழுதுத்துக்கள் மட்டும் போதாது தமிழ் மொழி சிறப்படைய! தொடர்ந்து செல்ல 247எழுத்துக்கள். மொத்தம் தேவைபடுகிறது
    கௌரியின் வம்சம் விரிவடைய திருமணம் என்னும் திருமந்திரத்தை ஓதுவது ஒன்றே ஒரே வழி!. தனி மரம் தோப்பாகுமா?
    "குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர் (அத்தி: மக்கட்பேறு எண் 66) திருக் குறள்.
    மலர் சொல்லி கேட்காத கௌரி தமிழ் தாத்தா திருவள்ளுவர் சொல்லுவதையாவது
    கேட்பாரா? இல்லையா


    புதுவைவேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பி அவர்களே.

      நீக்கு
  4. பணம் இருந்தால்போதும் என்று நினைப்பதும் தவறு
    திருமணம் என்பதே உடல்தேவைக்காகத்தான் என்று நினைப்பதும் தவறு
    இன்று முதியோர் இல்லங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான், அதற்குக் காரணமே அன்பின்மையும்,சுய நலமும் அதிகப் பணம் இருப்பதும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. முதியோர் இல்லம் இருக்கிற வரை
    திருமணம் தேவை இல்லையா?
    இல்லை... இல்லை...
    வாழ்க்கை வண்டிலை உருட்ட
    ஆண், பெண் இணைய வேண்டும்
    துன்ப, துயரம் வந்தால் தெரியும்
    ஒருவர் துணை
    ஒருவருக்குத் தேவை என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு மிக்க நன்றி இனியா அம்மா.
      பார்த்துவிட்டேன்.

      நீக்கு
  7. சகோதரி முதலில் தாமதமானதற்கு மன்னிக்கவும். இதை எப்படி மிஸ் பண்ணிவிட்டோம் என்று தெரியவில்லை! சரி விடுங்கள்...இதோ வந்துவிட்டோம்....

    “தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.// அருமையான வார்த்தைகள்.....உண்மையும் கூட...ஏனென்றால் அடுத்த உங்கள் வரிகள்.....

    பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ //

    உண்மையே! இதற்கு உண்மையான பதில் வேண்டும் என்றால், கௌரி மிகத் தெளிவாக இருப்பது தெரிகின்றது.

    //“வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ // சத்தியம்.. எந்தப் பெண்ணாலும் இப்படி வாழ முடியாது...."
    வாழ்கின்றார்களே! அப்படியும் இருக்கின்றார்களே! பெரும்பான்மையான பெண்கள் சமூகத்திற்காக வாழத்தானே செய்கின்றார்கள் " என்று நீங்கள் கேட்டால்...பதில் இல்லை. ஏனென்றால் அது அவர்கள் மனது. எங்கள் கருத்து உங்கள் இந்த வரிகள்.

    கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.// இதுவும் உண்மைதானே

    எனவே எங்கள் கருத்து....கௌரியைக் கல்யாணம் என்று சொல்லி வற்புறுத்துவதில் அர்த்தம் இல்லை! அவருக்காக அந்த உணர்வு வந்து, யாரையேனும் தெளிவாக தேர்ந்தெடுத்தால், அவர் மணம் புரியத் தயாராக இருந்தால் செய்யலாம். இல்லை என்றால் அவர் அப்படியே தனியாக இருப்பதில் தவறில்லை. எங்களுக்குத் தெரிந்த வட்டத்தில் இருவர் இப்போது அப்படித்தான் இருக்கின்றார்கள். மிகவும் உயர்ந்த நிலையில்! ஆனால் வாழ்க்கையைக் குறித்த மிகவும் தெளிவான கண்ணோட்டத்தில்.

    //“இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“// இது ஒன்று மட்டுமே நெருடல்.....ஆனால் ஒரு வேளை மணம் புரியாமல் வயதாகும் போது இந்தப் பணம் உதவலாம் அவருக்கு, நல்ல முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு!

    பதிலளிநீக்கு