திங்கள், 10 டிசம்பர், 2012

தமிழின் அழகு!!




(பதிற்றந்தாதி)



எண்ணப் பறவை எழுந்துதன் வாய்திறந்து

சொன்ன சுவையினைச் சொல்லிடவா? – மின்னிடும்

வண்ண வடிவழகை வார்த்தையில் வார்த்திடும்

கன்னல் மொழியில் கலந்து!



கலந்து கிளர்ந்த களவை எழிலாய்

மலர்ந்து நிறைந்த மனத்தில் - நலமாய்ப்

புலர்ந்து விடிந்த பொழுதின் அழகாய்

வளர்ந்த தமிழை வரைந்து!



வரைய அளைந்திடும் கோலம்! வளர

விரைய அழிந்திடும் காலம்! விரைந்து

நிறைந்த தமிழழகு நீங்காமல் நிற்கக்

குறைந்து மறையுமா? கூறு!



கூறும் நலத்தால் குடிகள் மனத்திலே

ஏறும் வளமாய் எழில்தமிழாய்! - வீறுகொண்டு

சேரும் மனத்தில் செழித்திடும் செந்தமிழால்

பேரும் பெருமையும் பார்!



பாருங்கள் என்றதும் பாவலர் பாடிடுவர்!

பார்..எங்கள் பாக்களைப் பார்ப்பதனால் - சீராக்கும்!

ஏர்எங்கள் எண்ணங்கள்! என்றும் தமிழழகைக்

சேருங்கள் செம்மை கொடுத்து!



கொடுத்து வளர்த்த கொடைகளைநாம் பாவில்

எடுத்து வடித்திடுவோம்! இன்பம் - அடுக்கித்

தொடுத்த கவித்தொடரில் துன்பமும் நன்றாய்

விடுக்கும் இனிய விருந்து!



விருந்தின் அறுசுவையை நாபெறும்! வேண்டும்

மருந்தின் தருசுவையை ஊனே அருந்தும்!

கருத்தின் பெறுசுவையைக் கற்றோர்!சீர் உற்றோர்

பொருந்தப் பெறுவார் புகழ்ந்து!



புகழும் பணப்பெருக்கால் பூரிக்கும் நெஞ்சை

இகழும் இழிவென்றே! என்றும் - சுகமாய்த்

திகழும் தெளிதமிழ் இன்பத்தில் மூழ்க

மகிழும் மனங்கள் மலர்ந்து!



மலர்ந்து மணம்வீசும் மல்லிகை முல்லை

புலர்ந்த பொழுதிலே வாடும்! - பலமாய்

வளர்ந்து தவழ்ந்திடும் வண்டமிழ்ப் பெண்ணோ

நிலமென நிற்பாள் நெடிது!



நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்

குடிகளில் கோமான் செயலைப் பொடிக்கத்

துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ

இடிக்கும் இடியென எண்ணு!  


அருணா செல்வம்

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  2. ஐயையோ.....
    ஒன்னுமே புரிய மாட்டேங்குதே..
    ஓ இதைத்தான் தமிழ் என்பாங்களோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் எழுத்தில் எழுதும் அனைத்தும் தமிழ் தான் ஆத்மா.
      என்ன இது கொஞ்சம் சுத்தப்படுத்தப்பட்டத் தமிழ். அவ்வளவு தான்.

      உங்களைப் போன்ற ஆத்மாக்களுக்கு உரைநடையில் எழுதினாலும்
      என்னுடைய ஆத்ம திருப்திக்காக அடிக்கடி இப்படி எழுதிக்கொள்வதும் நல்லது தானே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  4. இத்தனை அழகை ரசிக்க முடியா வண்ணம்
    ஏனோ கடவுள்
    குறை மாச மொழி அறிவை
    எனக்கு தந்து விட்டார் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக சொல்கிறீர்கள் ஹாரி.

      இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.
      நிச்சயம் புரியும். தமிழ் நமது மொழி ஹாரி. செம்மொழி.
      நன்றி ஹாரி.

      நீக்கு
  5. //துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ
    இடிக்கும் இடியென எண்ணு! //

    இது உங்களுக்கு தெறியுது. சிலதுகளுக்கு விளங்கவே மாட்டெங்குதே !!! அடிமை மோகத்தில் குப்புற விழுந்து கூழக் கும்பிடுப்போட்டு, தான் சிறந்த அடிமைன்னு ஆசீர்வாதம் வாங்குதே, நெடிந்து !!!

    அட நான் தாங்க ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க தானா அவர்...?
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீங்களே சொல்லிவிட்டிர்கள்... “சிறந்த அடிமைகள்“ என்று...
      நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது?

      நீக்கு
  6. கவிதை அருமை .ஏனோ பள்ளியில் படித்த நாலடியார் ஞாபகத்திற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலடியார் இன்னும் நன்றாக இருக்கும்!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. வெண்பா விருந்திற்குப் பாராட்டு.
    வாய்த்திறந்து
    நலமாய் புலர்ந்து
    நிற்க குறைந்து - இவற்றில் ஒற்றுப்பிழை இல்லையா என்பதை உறுதி செய்யவும்,
    சேறும் - சேரும் என்று வருமா என்ற ஐயத்தைத் தெளிவாக்கவும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி .
      நீங்கள் சுட்டிக்காட்டியத் தவறுகளைத் திருத்திவிட்டேன். அவையாவும் என் கவன குறைவால் ஏற்பட்டவைகள். அவசரத்தில் திருத்தாதப் பாடலைப் பதிவிட்டுவிட்டேன்.
      தவற்றைக் குறிப்பிட்டுக் காட்டித் தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு