திங்கள், 4 மே, 2020

அன்ன நடை நடந்து செல்லாதே!



(இசைப்பாடல்)
.
அன்ன நடை நடந்து செல்லாதே – உன்
சின்ன இடை அழகால் கொல்லாதே!
.
மணமான புதியதில் எனையன்றி வேறுண்டோ
மனந்துள்ளும் சொர்கமென நீயுரைத்தாய்!
குணமான கொண்டவன் நீயென்று குழந்தையாய்
கொஞ்சமும் பிரிந்தாலும் துயரென்றாய்!

பிள்ளைகள் பிறந்தாலும் பேரெழிலை நான்மகிழ
பின்னலைத் தொட்டாலும் முறைக்கின்றாய்!
கள்ளையுன் கண்ணுக்குள் வைத்தென்னைப் பார்த்துக்
காதலாய்ச் சிலநேரம் மயக்கின்றாய்!

பக்கத்தில் தாய்வீடு இருப்பதனால் தினமும்
பாசாங்கு காட்டியே செல்கிறாய்!
துக்கத்தில் நானிருப்பதைக் கண்டும் எனைத்
தொல்லையாய் எண்ணியே தள்ளுகின்றாய்!
.
ஊடலுடன் போகின்ற தேரழகே என்மீது
உள்ளாடும் ஆசையால் வந்திடுவாய்!
கூடலிலே கோபத்தை எடுத்தெறிந்து அமுதைக்
குறைவின்றி அன்புடனே தந்திடுவாய்!
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக