புதன், 23 செப்டம்பர், 2020

கருப்புத் துணியைக் கழற்றி எறி!

 


வாய்மை வெல்லும் எனச்சொல்லி
………வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
………தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
………துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாயைத் திறக்க வழியில்லை
………வாய்..மெய் பேசும் நிலையில்லை!
.
பெண்மை என்றும் மென்மையெனப்
……...பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
………வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
………உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டுக்
………கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
.
குருடன் கண்ட யானைபோலோ
………குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
………ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
………தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
……...கண்ணைத் திறந்து நாலும்பார்!
.
பெண்ணே! உன்கண் கட்டியதால்
………பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்,
……...மானம் இழந்த பேதையர்கள்,
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
……...உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
……...கருப்புத் துணியைக் கழற்றியெறி!
.
பாவலர் அருணா செல்வம்

2 கருத்துகள்: