புதன், 19 அக்டோபர், 2016

விட்டு விலகுமா கண்ணா ?





கொட்டிக் கிடக்குது கனிகள் – அதை
எட்டிப் பார்க்குது விழிகள் – உயிர்
தட்டிப் பிடிக்குது எளிதாய் – என்னைக்
கட்டிப் போடுது முடிவாய் ! – உன்

சுட்டுவிழி எனைத் தாக்க – என்
பட்டுவுடல் மெல்ல வேர்க்க – தேன்
சிட்டென மனம் பறக்க – நான்
தட்டுத்தடு மாறு கின்றேன் ! – அந்த

நட்டுநடு மென்னிரவில் – மின்னும்
வட்டநில வினைப்போல – கை
தொட்டு வரைந்து விட்ட – நெற்றிப்
பொட்டு இழுக்குது கண்ணே ! – இடும்

மெட்டுதனைக் கேட்டே – விழி
மொட்டென ஆனது தானாய் – நீ
கட்டினப் பாட்டைக் கேட்ட - மனம்
விட்டு விலகுமா கண்ணா ?

பாவலர் அருணா செல்வம் 
19.10.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக