ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கற்பின் கனலாய் மாதவி!

 



(கலிவிருத்தம்)
.
இழிவெனும் குலத்தொழிலில்
…….இயைந்துடனே நடக்கவில்லை!
பழிவரும் என்றாலும்
…….பாதகத்தைச் செய்யவில்லை!
அழிவுடனே நின்றாலும்
…….அத்தொழிலை நாடாத
விழிமொழியும் மாதவியின்
…….விதிதனையே நாமறிவோம்!
.
இக்காலம் போலில்லை!
…….இன்றிருந்த நிலையில்லை!
அக்கால வேளையிலே
…….ஆண்களுக்குப் பலபேராம்!
சிக்கான கோவலனின்
…….சிங்கார தேவதையாய்
மிக்காக வந்தவளே
……மென்னிடையாள் மாதவியே!
.
ஒருவனுக்கே ஒருத்தியென்ற
…….உயர்வான பண்பாட்டைத்
திருவெனவே மதித்திருந்தாள்
…….தியாகமுடன் வாழ்ந்திருந்தாள்!
பெருவாழ்வு வாழ்வதற்கு
…….பெருமழகு இருந்திருந்தும்
கருமனத்தைக் கொள்ளாத
…….கற்புடனே வாழ்ந்திருந்தாள்!
.
கற்புக்குக் கனலென்று
…….கண்ணகியும் சீதையையும்
பொற்புடனே புகழ்கின்ற
…….புண்ணியரின் கருவெல்லாம்
நற்பண்பில் உயர்ந்திருக்கும்
…….நலத்தினிலே கண்டதனால்
நற்குணத்தாள் மாதவியும்
…....கற்பினிலே கனலாவாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக