வியாழன், 29 ஜனவரி, 2015

படித்ததில் சிரித்தது!


அழகு மனைவி!!



  ஒரு நடு இரவில் தன் மனைவியின் கை போனில் “பீப்“ சத்தம் கேட்டது.
  கணவர் எழுந்து, அந்தக் கைபோனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக “யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?“ என்று கத்தினார்.
  மனைவி, “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...“ என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் கைபோனைப் பார்த்தாள். உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்..
   “அட லூசு புருஷா..... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.... இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று.

 ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அவரவர் கவலை அவரவர்க்கு!!



   டாக்டர், கணவனின் உடம்பைச் சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். அதற்குள் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் எல்லாவற்றையும் நிறைவேத்திக் கொள்ளுங்கள்....“ என்று சொல்லி அனுப்பினார்.
    மாலை 5 மணி.... கண்ணீர் மல்க விஷயத்தை தன் மனைவியிடம் சொன்னான் கணவன். அவள் துடித்து அழுதாள்.
   கணவன், “எனக்கு உன் கையால் வெங்காய தோசையும் கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா. இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி இருக்கிறது“ என்றான். செய்து கொடுத்தாள்.
   மாலை 7 மணி, “ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா. இன்னும் 5 மணி நேரம் தான் இருக்கு...!!“ என்றான். செய்து கொடுத்தாள்.
   இரவு மணி 10... “நல்ல பசும்பாலில் கொஞ்சமா சக்கரைப் போட்டு உன் கையால குடும்மா..... இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....! என்றான். மனைவி அதனையும் செய்தாள்.

   இரவு 12 மணி. தூங்கும் மனைவியை எழுப்பினான் கணவன். அவள்.... “பேசாமல் படுங்க.... காலையில எழுந்தவுடன் எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. சொந்தக்காரங்களுக்குச் சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல புக் பண்ணனும்.... உங்களுக்கு காலையில எழுந்திருக்கிற வேலை கூட இல்ல....“ என்றாள் கோபமாக.

கணவன்.....?????!!!!!!!!


படித்ததில் சிரித்தது.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எங்கே சென்றாய்?



கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூட
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!

அருணா செல்வம்.

வியாழன், 22 ஜனவரி, 2015

பள்ளியறையிலே ஓர் பளிங்குச்சிலை! (முடிவு)



    நரேன் அவன் விரும்பும் மிலானியையும் டேவிட்டையும் பிரிப்பதற்கான சரியான(?) வழியைக் கண்டு பிடித்து விட்டான்.
   அதன் பிறகு அவசர அவசரமாக செயல் பட்டான். டேவிட்டைப் பற்றி தெரிந்துக் கொள்ள அதிக நாட்கள் பிடிக்கவில்லை. டேவிட் சாதாரண குடும்பம். அவன் அப்பாவின் முன்றாவது மனைவியின் நான்காவது மகன்.
   ஏதோ ஒரு மோட்டார் தயாரிக்கும் கம்பெனியில் அடிமட்ட வேலையாள். மனத்தில் குறித்துக்கொண்டான்.
   மிலானியிடம் எந்த மாற்றத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவளின் அப்பா அம்மாவிடம் அதிகமாக அக்கரை எடுத்துப் பழகினான். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.
   அதே போல் டேவிட்டிடமும் அக்கரையுடன் நடப்பதாக நடித்து அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஊசிக்கு அடிமையாக்கினான். இதைக் கற்றுக்கொடுக்க நரேனுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.
   தொடக்கத்தில் வேண்டாம் என்று மறுத்த டேவிட்டின் எதிரிலேயே தன் கையில் சாதாரண வலி மருந்து நிரம்பிய ஊசியைக் குத்திக் காண்பித்தான். “இதோ பார் டேவிட். நான் நன்றாகத் தானே இருக்கிறேன். ஆனால் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னைக் கட்டாயப் படுத்தவில்லை. ஒரே ஒரு முறை முயற்சித்துப் பார்....“ என்றதும் டேவிட் தயங்கியபடி கையை நீட்டினான்.
    நரேனுக்கு மனத்துள் வெற்றிப் புன்னகை. டேவிட் சற்றுத் தயங்கியும் தடுத்தும் நரேனே ஊசியைக் குத்தி விட்டான்.
   அவன் மயங்க... அடுத்து அடுத்து போதை மருந்து ஊசியைக் குத்தி அந்த போதையிலேயே மிதக்க விட்டான். இந்த போதையை ஒரு முறை அறிந்து விட்டால்  அதை விடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது நரேனுக்கு நன்றாகவே தெரியும்!
    இப்போது மிலானி வீட்டிற்கு அடிக்கடி போய் வருகிறான். இப்படித்தான் சென்ற மாதம் ஒருமுறை மிலானியின் வீட்டினுள் நுழைந்த போது கலங்கிய விழிகளும் வாடிய முகமுமாக மிலானியின் தந்தை...
   நரேன் கனிவாக விசாரித்ததில், அவர் கலங்கிய படி சொன்னார்.
   “இந்தப் பெண்ணை ஒரே பெண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தால் அந்த கஞ்சா புடிக்கிற டேவிட்டோட் சேர்ந்து....“ அவரின் குரல் தடுமாறியது.
   “சேர்ந்து...?“ தெரிந்த விசயம் தான். இருந்தாலும் அவலுடன் கேட்டான்.
   “சேர்ந்து.... என்ன சொல்லுறது. சொல்லவே வாய் கூசுகிறது. சே..... அவனைத் தான் கட்டிக்குவேன்னு வேற சொல்றா....“
   “அவ சொன்னல் என்ன? நீங்கள் தான் அவ வாழ்க்கையை ஒழுங்கா அவளுக்கு அமைச்சித் தரனும்...“
   இந்த நேரத்திற்காகவே காத்திருந்தவன். ஓதினான்.
   “செய்யலாம்ப்பா.... ஆனால் இப்படிப்பட்ட பெண்ணை யார் கல்யாணம் பண்ணிக்குவா...?“
   “ஏன்....? நான் பண்ணிக்கிறேன் சார்...“
   “என்னப்பா சொல்லுறீங்க...!! எல்லாம் தெரிஞ்ச நீங்களே வா....?“
   “ஆமாம். எல்லாம் தெரிஞ்ச நானே கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தான் அவ வழ்க்கை நல்லபடியா அமையும். நீங்க சம்மதிச்சா போதும். எனக்கு மிலானி சம்மதம் கூட வேண்டாம்“
   அவனுக்குத் தெரியும், மிலானி இதற்குச் சம்மதிக்க மாட்டாள் என்று....
    அன்புடன் கையைப் பிடித்துச் சொன்ன நரேனைக் கடவுளுக்கு நிகராக நினைத்துக் கும்பிட்டார் மிலானின் தந்தை.
   
   இதோ... கல்யாணம் முடிந்துவிட்டது. இன்றே முதலிரவு.
   யாரோ கதவைத் தட்டும் ஓசை. நரேன் கதவைத் திறக்க மிலானி வெண்பட்டுச் செலையில் வெள்ளை மயிலாக நின்றிருந்தாள். அவள் அருகில் அவள் அம்மா.
   அவன் சற்று நகர்ந்து வழிவிட, மலானியை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
   கதவைச் சாற்றிவிட்டு திரும்பி குதுகலமான மனத்துடன் மிலானியைப் பார்த்தான். அவள் கட்டிலில் சாய்ந்திருந்தாள். கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
   அருகில் சென்று “மிலானி...“ என்று மெதுவாக அழைத்தான்.
   “ம்....“
   “திரும்பி என்னைப் பாரேன்....“ சொல்லிக் கொண்டே அவள் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான். முகம் பொத்தென்று அவள் பக்கமாக திரும்பியது எந்த வித உணர்வுமின்றி.
   என்ன இது.... போதை ஏற்றும் கண்களில் போதை மயக்கமா....? “மிலானி... மிலானி....“ யோசனையுடன் அவள் கன்னத்தைத் தட்டினான்.
   “ம்.... நரேன் நீயா....? நா டேவிட்டுன்னு நெனச்சேன். நரேன்... நரேன்.... உன்ன கல்யாணம் பண்றதுக்காக என் அம்மா அப்பா... ரெண்டு வருஷமா காதலிச்ச டேவிட்ட பிரிச்சிட்டாங்க. அவனால ஆன கர்ப்பத்தைக் கூட கலைச்சிட்டாங்க தெரியுமா ஒனக்கு? நரேன் இது கூட பரவாயில்லை. இந்த... இந்த... டேவிட் கத்துக்குடுத்த ஊசியைக் கூட போடக்கூடாதாம். என்னால இனிமேல முடியுமா.... நரேன் நீயே சொல்லு.... முடியாது நரேன்....“
   மிலானி திக்கித் திக்கிக் குழந்தையாகப் பேசினாள். நரேன் சட்டென்று அவள் கையைப் பார்த்தான். வெண்மை நிற கையில் கருநீலம் படர்ந்து... குட்டிக்குட்டியாய்ச் சிவப்புப் புள்ளிகள்.... அவள் போதை ஊசி போடுபவள் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
   “எல்லாம் உன்னால தான்.... நீ மட்டும் அவனுக்கு இந்தப் பழக்கத்தைக் கத்துத் தரலைன்னா... நா இன்னேரம்.... இன்னேரம்.... ஆ..ஹா... ஆஹாஹா... ஆஹாஹா...
   அவள் சிரித்தபடி கட்டிலில் விழுந்தாள்.... வாயில் எச்சில் வடிய...
   நரேன், உணர்ச்சியற்று போய் பளிங்குச் சிலையாகக் கட்டிலில் கிடந்த மிலானியைப் பார்த்துக் கொண்டு அவனும் ஒன்றும் செய்யமுடியாத கற்சிலையாக நின்றான்.

அருணா செல்வம்.

19.10.1999

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பள்ளியறையிலே ஓர் பளிங்குச்சிலை!



    டிசம்பர் மாதத்துக் குளிர். நான்கடி தூரத்தில் ஆள் இருந்தால் கூட கலங்கலான உருவத்தைக் காட்டி பயமுறுத்தும் அளவு மேக மூட்டம் இறங்கி பூமியை ஆக்கிரமித்து இருந்தது. இவ்வளவு நேரமாகப் பெய்த பனிமழையால் ஊரே வெண்மையாகி இலை இல்லாத நிர்வாண மரங்களுக்குத் தற்காலிக உடை அளித்திருந்தது.
    நரேன் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மாடி அறையில் இருந்துக்கொண்டு மூடிய கண்ணாடி சன்னலின் வழியாக பூமழையாகப் பொழிந்து கொண்டிருந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தான். நரேன் பிரான்சுக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இயற்கையைக் கண்டு ரசிக்கிறான்.
    இதே வேறு ஒரு நாளாக இருந்தால்.... “சே என்ன ஊர் இது? எப்பப்பார் மழை பனி குளிர்ன்னு.... ஊரா இது?“ என்று வாய் விட்டுத் திட்டுவான்.
   ஆனால் இன்று....?
   அவனுக்கு இதைப் பார்க்கும் பொழுது ஏதோ தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வு!
   இருக்காதா...?
   இன்று அவனுக்கு முதலிரவாயிற்றே....
   மனத்தில் மகிழ்ச்சி நிறைந்தால் எதுவும் அழகாகத் தான் தோன்றும்.
    ஆனால்... இன்னும் தேவ கன்னி.... அதுதான் அவன் காலையில் தாலி கட்டிய மனைவி மிலானி தான் இன்னும் வரவில்லை.
    முதலிரவு அறையில் தனித்திருப்பது எவ்வளவு அவஸ்த்தை என்பதை அனுபவித்தவரால் கூட விவரித்துச் சொல்ல முடியாது.
    எப்போது வருவாள்....? கைகடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து பத்து. இன்னும் ஏன் வரவில்லை? வருவாள். வரும் போது வரட்டும். இனி அவள் எனக்குத்தான் சொந்தம். கிணற்று நீரைக் காட்டு வெள்ளமா அடித்துக்கொண்டு போக முடியாது.
   இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அது தன்னைக் குடிப்பவரையும் சாம்பலாக்குவது போல அதுவும் கொஞ்ச நேரத்தில் நெருப்புக்கு இறையாகி சாம்பலானது.
   அதற்குள்ளேவா....? மற்றொரு சிகரட்டை வாயில் வைத்து பற்ற வைக்கமல் செல்போனை எடுத்தான்.
    அவள் வீட்டுக்குப் போன் செய்து ஏன் இவ்வளவு நேரம்....? என்று கேட்கலாமா...?
    வேண்டாம். முதலிரவு அதுவுமா “இன்னுமா பெண் வரவில்லை என்று கேட்டால்... மாப்பிள்ளைக்கு ரொம்பதான் அவசரம்என்று கேலி பேசுவார்கள். வேண்டவே வேண்டாம்.
    என்ன பண்ணலாம்.... எழுந்து அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அறையில் அழகுக்காக வைக்கப்பட்ட ரோமன் நாட்டு கையில்லாத பெண் பளிங்குச் சிலை அவன் கண்ணில் பட்டது. அழகான வடிவம். அதைப் பார்த்ததும் அவனுக்கு மிலானி ஞாபகம் உடனே வந்தது.
    அவள் நினைவு வந்ததும் அவன் உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. இந்தப் பொம்மையைப் போல தான் அவளும்! அழகோ அழகு. ஆனால் கையிருந்தும் எதுவும் செய்ய முடியாத ஊனம். இல்லை. இல்லை. ஊனமாக்கப் பட்டவள். இப்படி அவளை ஊனமாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது...
   அந்த அழகு தேவதையின் உடல் இன்னும் சிலமணி நேரத்தில்... இல்லை. இல்லை... அதற்குள் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக.... இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அனுபவித்து அவளே கேட்கும் வரையில் காத்திருந்து... அவளே லேசாக கெஞ்சியப் பிறகு தான் அவளை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்.
   அவ்வளவு சீக்கிரம் எதையும் முடித்துவிட்டால் எந்த வித சுவாரசியமும் இருக்காது. அப்போது தான் அவளை அடைய நான் போட் பிளேனுக்கான பலன் கிடைக்கும்.
   இருக்காதா பின்னே....? அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது.
   ஒரு வருடம் இருக்குமா....?
    இருக்கும். அதற்கு மேலேயும் இருக்கும்.
  நரேனுக்குக் கடந்த காலம் அவன் மனத்திரையில் மறு ஒளிபதிப்பானது.

   அந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு நரேன் தான் கடந்த ஐந்து வருடமாக மானேஜர். ஓட்டல் முதலாளி ஜெர்மனி நாட்டுக்காரர் என்றாலும் இந்தியனான நரேனை அனைவருக்கும் பிடிக்கும். காரியத்தில் கண்ணாயிருப்பான் என்பதால்.
   அதனால் தனக்கு ஓர் உதவியாளர் தேவை என்றதும் உன் விருப்பம் போல் செய்துக்கொள்என்று முழுஉரிமை அளித்திருந்தார். அதன்படி விளம்பர படுத்தியத்தில் பல பேருக்கு நடுவில் மிலானியும் வந்திருந்தாள்.
   அவளை முதன்முறையாகப் பார்த்ததில் இருந்து நரேனுக்கு தன் நினைவு தன்னிடம் இல்லை என்றாகி விட்டது.
   கோதுமை நிறம் என்று சொல்லலாமா? இல்லை அதைவிட சற்று வெளுப்பு. உயரம் அவனுக்குத் தகுந்த அளவு தான் என்றாலும் அவள் போட்டிருந்த ஹை ஷீல்ஸ் மேலும் மூன்று அங்குலத்தைக் கூட்டிக் காட்டியது.
   முகம்..... கை தேர்ந்த சிற்பியால் செதுக்கிய சிலை. உடல்....? உடம்பை இறுக்கமாகப் பிடித்திருந்த ஜீன்சும் வெளிர் நீலநிற பனியனில் த்துர்ஸ் ம்முவா” (என்னைத் தொடு) என்று அழுத்தமான நிறத்தில் எழுதிய வாக்கியம்... என்னைத் தொ...வாஎன்று அழைப்பது போன்ற உடல்கட்டு!
   கழுத்து வரையில் வெட்டிய செம்பழுப்பு நிற முடியை ஒரு பக்கமாகத் தூக்கி வாரி இருந்தது மேலும் அழகைக் கூட்டியது.
   அவள் குறுக்காக மாட்டியிருந்த ஷான்ட் பேக் மார்பகங்களுக்கு நடுவில் புதைந்து பார்ப்பவர் விழியை அகலவிடாமல் தடுத்தது.
   இப்படிப்பட்ட அழகிதான் தனக்குத் தேவை. முதலில் வேலைக்கு. பிறகு தனக்காக மட்டும்.
   அவனுடைய கணிணி மூளை உடனே அவளுக்கு வேலை கொடுக்க கட்டளை இட்டது.

   துவக்கத்தில் ஒரு சில வார்த்தைகளோடு கழிந்த நாட்கள் ஒரு வாரத்தில் சூடு பிடித்தது. அவளாக இவனிடம் பேசவில்லை என்றாலும் இவனே அவளிடம் வலியபோய் பேசி அவளைத் தெரிந்து கொண்டான்.
   பல வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்தியத் தம்பதியருக்குப் பிறந்த ஒரே மகள் மிலானி. நிறைய செல்லம். நிறைந்த செல்வம். அப்பா அம்மாவிற்கு அரசு வேலை. கை நிறைய சம்பளம்.
   எவ்வளவு பரம்பரை சொத்து இருந்தாலும் தானே சம்பாதிப்பது தான் பெருமை என்றெண்ணும் பிரான்ஸ் நாட்டவரின் உள்ளம் அங்கேயே பிறந்து வளர்ந்த மிலானிக்கும் இருந்ததால் வேலைக்கு வருகிறாள்.
   இது போதும் அவனுக்கு. இங்கே பத்து வருடமாக உழைத்து வயிற்றுப் பசிக்கும் உடல்பசிக்கும் பணம் கொடுத்து தீனி போட்டது போக இப்போது மனப்பசிக்கும் உணவு தேவைப்பட்டது. அதற்கு இவள் தான் நல்ல விருந்து.
   மனத்தில் கணக்கு போட்டுப் பார்த்து அதை அவளுக்குத் தெரிவிக்க அவளை ஒரு நாள் இரவு ரெஸ்டெரான்டுக்கு அழைத்தான். அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள்.
   வந்தாள். தனியாக இல்லை. தன் காதலன் டேவிட் என்ற வெள்ளைக்காரனுடன்.
   நரேனின் இதயம் அப்போதே சுக்கு நூறாக வெடித்துவிட்டது.

    அந்த நிகழ்வை மறக்க அவனுக்கு சில நாட்கள் பிடித்தது. அதன் பிறகு தெளிந்தான் என்பதை விட அந்த டேவிட்டை அவளிடமிருந்து எப்படி பிரிப்பது என்று தெளிவான முடிவை எடுத்திருந்தான் என்பதே உண்மை.

(தொடரும்)

(நட்புறவுகளே..... கதை மிகவும் நீண்டு விட்டதால் முடிவை அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.
அதுவரையில் நரேன் எப்படி அவர்களின் காதலைப்பிரித்து மிலானியை மணந்தான் என்பதை...... யோசித்து வையுங்கள்)

நன்றியுடன்

அருணா செல்வம்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தோழிக்காக ஒரு பாட்டு!



தொலைந்து போன ஆண்டுகளில்
    தோற்றுப் போனாள் என்தோழி!
மலைத்துப் போயே அமர்ந்தவளின்
    மதியை எண்ணிச் சிரிக்கின்றேன்!
விளைந்து விட்ட நெற்பயிரை
    வெட்டி னாலே பிறர்க்குதவும்!
வளைந்து போகும் பாதைகளும்
    வழியை நமக்குத் தந்துதவும்!

கடந்து போன வாழ்க்கையிலே
    கரைந்து போன கண்ணீரோ
கடலில் கலந்த உப்புநீரே!
    கவலை இல்லா மனிதன்யார்?
தடங்கள் இல்லா வெற்றியேது?
    தவற்றைச் சரியாய்க் காட்டிவரும்
கடவுள் இல்லா இடமெங்கே?
    இருந்தால் எனக்கும் காட்டிவிடு!

துறவு பூண்ட மனத்தினிலே
    துன்பம் கூட தூசியன்றோ?
வரவு செலவு பார்த்தாலே
    வாழும் வாழ்க்கை பாரமன்றோ?
இரவு நேர வானத்திலே
    இளைய பிறைதான் சூரியனோ?
உறவு பலமாய் அமைந்திருக்க
    உலகில் எதுவும் அமிர்தமன்றோ!

நேராய் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்
    நெடிய நீண்ட தென்னைமரம்!
பாராய் தோழி அதன்வேரைப்
    பல்வேர் கோணல் வளைந்திருக்கும்!
வேராய் மனமோ குலைந்தாலும்
   விரும்பி எதையும் எதிர்கொண்டால்
காராய் இருந்த மனம்கூட
    கவிதை போல அழகாகும்!
   

அருணா செல்வம்

புதன், 14 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்!



ஓயாது உழைத்த உழவரின் நல்மனம்
தேயாது இருந்திட, தேனான மாமழை
தேவைக்காய்ப் பெய்திட, தேடி விதைத்தது
சேவையெனத் தந்திட, செய்யும் தொழில்கள்
வளத்தைக் கொடுத்திட, வண்ணமிடும் மீன்கள்
குளத்தில் நிறைந்திட, கொண்டவள் கொஞ்சியே
புன்னகைப் பூத்திட, புண்மனம் கொண்டோரின்
வன்பகை ஓடிட, வஞ்சனை இன்றித்
தெளிதமிழ்ப் பேசிட, தெம்புடன் நாமும்
களிப்புடன் ஆடிட, காதலரும் கூடியே
போற்றிடும் பொங்கலாய்ப் பொங்கு!

(பஃறொடை வெண்பா)

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அருணா செல்வம்.
15.01.2015

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இன்றே கொளுத்து!



வம்பை வளர்த்திடும் வன்முறையும் தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும் குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும் இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

14.01.2015

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முதுமை!!



நட்புறவுகளுக்கு வணக்கம்!
    இன்று (11.01.2015) பிரான்சு தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் “ஆடிய ஆட்டம் என்ன?“ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
   அதில் “இளமை“ “செழுமை“ வறுமை“ “முதுமை“ என்ற தலைப்புகளில் நான்கு கவிஞர்கள் பாடினார்கள். அதில் நான் ஒருத்தி. எனக்குக் கொடுத்த தலைப்பு “முதுமை“. இதனால் எனக்கு கவிஞர் மீது கொஞ்சம் வருத்தம் தான். அதனால்.....

முதுமையிலே ஆடுகின்ற ஆட்டம் என்ன?
     முறையாக மொழிந்திடவே அருணா வந்தார்!
எதுகையிலே மோனையிலே என்னைப் போன்றே
    எழுதுகின்ற ஆற்றலினை என்முன் கற்றார்!
புதுமையிலே இவருக்கு நாட்டம் உண்டு!
    பொல்லாத காலத்தில் மாட்டிக் கொண்டார்!
புதுவையிலே இருக்கின்ற தெய்வம் எல்லாம்
    புரப்பட்டுக் காக்கட்டும் புகழை ஈந்தே!

அருணா செல்வமே! அருந்தமிழ் வெல்லமே!
திருமால் இல்லமாய் இருக்கும்உன் உள்ளமே!

முதுமை ஆடிய ஆட்டம் பாடப்
பதுமைபோல் வருகிறார் அருணா செல்வம்!

முதுமையைப் பாட இளமையே வருக!
முழுமையாய் ஆட இனிமையே தருக!

அவையேறி வருக! – பாக்கள்
சுவையுறித் தருக!

என்று என்னைப் பட அழைத்தார். இதைக் கேட்டதும் என் வருத்தமெல்லாம் பறந்துவிட “ஆடிய ஆட்டம் என்ன?“ என்ற தலைப்பில் “முதுமை“யைப் பாடினேன்.

ஆடிய ஆட்டம் என்ன?  "முதுமை"

அவை வணக்கம்.

தங்கத் தமிழைப் படைத்திட்ட
   தமிழின் தலைவா முதல்வணக்கம்!
எங்கும் நிறைந்து கமழ்கின்ற
   எழிலே தமிழே என்வணக்கம்!
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
   சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
   அவைக்கும் என்தன் நல்வணக்கம்!

குரு வணக்கம்.

துள்ளியாடும் பருவத்தில் எனக்குத்
      தள்ளாடும் இத்தலைப்பு!
பள்ளியினால் வந்திடுமோ இதைப்
     படித்தறிந்தால் புரிந்திடுமோ?
உள்ளாடும் உணர்வுகளைச் சபையில்
     உரைத்திடவே நான்வந்தேன்!
மல்லாட்டம் இங்கில்லை தலைவா
     மதிவணங்கிக் கேட்கின்றேன்!

ஆடிய ஆட்டம் என்ன?
(முதுமை)

நரம்பெல்லாம் வாடிப்போய்
     நாடியெல்லாம் தளர்ந்துபோய்க்
கரம்பிடித்த துணையும்போய்க்
    கடந்தகால அனுபவத்தைச்
சிரம்தாங்கிச் சொல்வதனால்
    சீர்க்குலைந்து போனாலும்
வரமென்று சொன்னார்கள்
     வயதான முதுமையினை!

களம்நிறைந்த போட்டியினில்
    கர்வமுடன் பெற்றவெற்றி
வளம்நிறைந்து வளர்ந்துவிட்ட
    வாலிபத்தின் வேகமது!
இளவயது இரத்தஓட்டம்
    இன்றில்லை என்றாலும்
உளமென்ற கூட்டினிலே
    ஓய்வின்றி நினைவுண்டு!

அன்றாடிய ஆட்டங்கள்  
    ஆசையதன் வெளிபாடு!
என்றென்றும் நிலைத்திருப்போம்
    என்றெண்ணும் குறைபாடு!
இன்றென்றும் நாளையென்றும்  
    என்றறியா நிலைபாடு!  
நன்குணர்ந்து நான்கண்டேன்
    நாடியெல்லாம் தளர்ந்தபின்னே!

எதிர்நீச்சல் போட்டெழுந்தே
     எனக்குநிகர் யாரென்றே
மதியிழந்து ஆட்டமிட்டேன்!
     மாறிவிட்ட காலத்தில்
சதிசெய்த விளையாட்டோ
     சமதர்மக் கோட்பாடோ
விதியறிந்து பார்க்கின்றேன்
     வீரமெல்லாம் போனதெங்கே?

அந்தநாளில் ஆடியதோ
    ஆனந்தக் கூத்தாட்டம்!
இந்தநாளில் ஆடுவதோ
     இயலாத தள்ளாட்டம்!
வந்துபோன நாட்களிலே
    வம்பலந்த சொல்லாட்டம்
எந்தநாளில் இனிவருமோ
    ஏங்கிடுதே மனஓட்டம்!

கோலாட்டம் ஆடியக்கை
     கோலூன்றி நடக்கிறது!
வேலாட்டப் பார்வையின்று
     விழித்திறையை மறைக்கிறது!
காலாட்டிச் செய்தவேலை
     கைநிறைய தந்தாலும்
தாலாட்ட யாருமின்றித்
     தனியாளாய் ஆடுகின்றேன்!

அருணா செல்வம்

10.01.2015