வெள்ளி, 28 டிசம்பர், 2012

கம்பன் கவியே கவி!! (பதிற்றந்தாதி)







கம்பன் கவியே கவியென்று பாடுவோம்

இம்மண் மகிழ்ந்தே இசையமைக்கும் - கம்பனால்

செம்பொன் தமிழுக்குச் சேய்கள் பலகிடைக்கும்

எம்மண்ணும் போற்றும் எழுந்து!



எழுந்து வருமே எழுத்துலகம்! பண்பாய்

தொழுது தொடர்ந்து படிக்கும் - முழுதும்

வழுவற்ற காவியத்தின் வர்ணனையைக் கண்டால்

பொழுதை மறக்கும் பொதிந்து!



பொதிந்து படிக்கும் மனம்புகழும்! கம்பன்

பதித்த உவமைநலன் யாவும் - விதித்த

விதியின் வழியை அறியும்! புதிதாய்

உதித்திடும் கற்பனை ஊர்ந்து!



ஊர்ந்துயர் எண்ணம் உருவாகும்! கம்பனால்

சேர்ந்துயர் கற்பனைச் சீராடும்! பார்புகழ

சார்ந்துயர் வாழ்வும் சதிராடும்! துன்பமெலாம்

தீர்ந்துயர் போகும் தெளிந்து!



தெளிவான சிந்தனையால் காணும் பொருளோ

பளிங்காகப் பார்க்கப் புரியும்! - உளியால்

எளிதாகக் கல்செதுக்கும் சிற்பிபோல் கம்பன்

அளித்தநல் சிற்பம் அது!



அதுவோர் அதிசயம்! ஆழ்ந்த கருத்தால்

புதுப்புதிதாய் அர்த்தங்கள் பூக்கும்! - பொதுவாய்

எதுவும் சுவைத்தால் இனிக்கும்! படிக்க

இதுவோ இனிக்கும் விருந்து!



விருந்தாய் விருந்தங்கள் தந்தகவி! சொற்கள்

பருந்துகண்ணின் நுண்மதிப் பார்வை! - பொருந்தும்

கருத்தெல்லாம் காலத்தின் கண்ணாடி! கற்போர்

திருவென்றே காப்பார் சிறந்து!



சிறப்பான செய்திகள் சீராக நின்றே

அறம்பொருள் கூறிடும்! அன்பின் - திறத்தைப்

புறமெனக் கொண்டும் பொலிந்தாடும்! போற்றும்

இறவா புகழ்நூல் என்று!



என்றும் பலகேள்வி என்னிடத்தில் வந்தாலும்

உன்றன் கதையில் ஒளிந்திருக்கும்! - என்றென்றும்

இன்றும் இலக்கணத்தில் கேள்வியாய் கேட்டிடவே

ஒன்றுண்டோ கம்பா உனக்கு!



கம்பா உனக்குநிகர் நற்கவியாய் இங்கெந்த

கொம்பனும் இல்லையய்யா! நாடறிந்தால் - கும்பிடும்!

செம்மையுடை செந்தமிழ் செல்வமே என்றுசொல்லும்

கம்பன் கவியே கவி!



அருணாசெல்வம்

23 கருத்துகள்:

  1. எப்படிப் பாராட்டுவதெனத் தெரியவில்லை
    மிக மிக அருமை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் இரமணி ஐயா.

      பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கவிஞர் கி பாரதிதாசனின் வாரிசு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்
    மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...?
      மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  3. கம்பனுக்கு நிகராய் எந்தக் கொம்பனும் இல்லை. -ஹப்பா... அருமையான வரிகளில் அசத்தலான கவிதை. வியந்து படித்து ரசித்தேன் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சவுக்கடி“ அவர்களுக்கு வணக்கம்.

      நீங்கள் சுட்டிக்காட்டியப் பிழைகளைச் சரிசெய்துவிட்டேன்.

      தங்களின் வரவிற்கும் தமிழ்மரபில் பிழைகண்டதும் உடனே ஓடிவந்து அதைத் திருத்தச்சொல்லி வார்த்தைகளால் (மென்மையாக) கொடுத்தச் சவுக்கடிக்கும் மிக்க நன்றி.

      (இரண்டு நாட்களாக கணிணியில் தமிழ்மென்பொருள் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் திருத்துவதற்குத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.)

      நீக்கு
  5. உண்மைதான்..கம்பன் கவிக்கு நிகர் ஏது?

    பதிலளிநீக்கு
  6. இரட்டை வரியில் எல்லாவற்றையும் சொன்ன மகாமனிதன்.ஐரோப்பியர்கள்கூடச் சிலர் அறிந்து சொல்கிறார்கள்.அவரைப் பாராட்டிய உங்களுக்கும் வாழ்த்துகள் அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      நான் குறித்து எழுதியவர் கம்பர்.
      நீங்கள் திருவள்ளுவர் என்று சற்று குழம்பி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
      ஆனால் நீங்கள் இப்படி சொன்னதும் திருவள்ளுவரைக் குறித்தும் ஓர் அந்தாதி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. கூடிய விரையில் வெளியிடுகிறேன்.
      மிக்க நன்றி ஹேமா.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வணக்கம்!

      கம்பன் கவியே கவியென்று தேனளித்தீா்!
      அம்மன் சிலையாய் அழகளித்தீா்! - எம்மனம்
      பொங்கி விளைக்கும் புகழ்வெண்பா! உம்மிடத்தில்
      தங்கிக் தழைக்கும் தமிழ்!

      நீக்கு
    2. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெண்பாவில் அந்தாதி பாடி வெளுத்துக் கட்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  9. நிச்சயம் கம்பனுக்கும் கொம்பன் இல்லை கண்ணதாசனை போல திரைப்பட பாடல் எழுதுபவனும் இல்லை என்பது உண்மையே

    பதிலளிநீக்கு
  10. இந்தப் 'பதிற்றந்தாதி' லேபிளையும் நீக்குங்கள்..

    பின்னூட்டத்தை வெளியிடக் கூட உங்கள் மனம் மறுக்கிறது..தவறை ஒப்புக் கொள்ளும் தைரியம் மிகுந்தவரே அதைத் திருத்திக் கொள்ளும் திறனையும் பெற இயலும் !!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரை வெளியிடப் பயப்படும்
      நபருக்குப் பதில் சொல்ல வேண்டிய
      அவசியம் இல்லை.

      நீக்கு